Home

Thursday, June 24, 2010

முன்னுரிமை தமிழுக்கே ( தமிழ்நாடு)

தமிழ்நாடு (Tamil Nadu):

தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. மதராசு மாநிலம் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது.

இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது.நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.இம்மாநிலத்தின் முக்கிய ஆறான காவிரி ஆறு வடக்கே கர்நாடக மாநிலத்தில் குடகுமலையில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி ஆகியவை பிற முக்கிய ஆறுகளாகும்.

மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் தலைநகரமுமாகும். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா கடற்கரை சென்னையிலேயே உள்ளது. கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி மற்றும் வேலூர் தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும்.

வரலாறு

தமிழ்நாட்டு வரலாறு

சோழ,சேர,பாண்டிய மன்னர்களால் ஆளப்பெற்று பல கோயில்களையும்,சிற்பங்களயும் பெற்ற கலை அம்சம் கொண்ட பகுதியாக விளங்குகிறது. "வட வேங்கடம் தென் குமரி தமிழ் கூறு நல்லுலகு" என்கிறது தொல்காப்பியப் பாடல்.

தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.

பாண்டியர்களுடைய காலம் கிமு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. மதுரை முதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்

தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.சுப்பிரமணிய பாரதி, வ. உ. சிதம்பரம்பிள்ளை, சி. வி. இராமன், பெருந்தலைவர் காமராசர், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், ஆர். வெங்கட்ராமன், சி. என். அண்ணாதுரை , ஈ.வெ.ராமசாமி (பெரியார்), சீனிவாச ராமானுஜன், அப்துல் கலாம், பாரதிதாசன், கண்ணதாசன் ஆகியோர் மாநிலத்தின் பிரபலமானவர்களுள் சிலராவர். இவர்களோடு, கண்ணகி, திருவள்ளுவர்,தொல்காப்பியர் , ஔவையார், கம்பர், கரிகால்சோழன், இராஜராஜ சோழன் போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும்.


தமிழ் நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன.

1. அரியலூர் மாவட்டம்
2. இராமநாதபுரம் மாவட்டம்
3. ஈரோடு மாவட்டம்
4. கடலூர் மாவட்டம்
5. கரூர் மாவட்டம்
6. கன்னியாகுமரி மாவட்டம்
7. காஞ்சிபுரம் மாவட்டம்
8. கிருஷ்ணகிரி மாவட்டம்
9. கோயம்புத்தூர் மாவட்டம்
10. சிவகங்கை மாவட்டம்
11. சென்னை மாவட்டம்
12. சேலம் மாவட்டம்
13. தஞ்சாவூர் மாவட்டம்
14. தர்மபுரி மாவட்டம்
15. திண்டுக்கல் மாவட்டம்
16. திருச்சிராப்பள்ளி மாவட்டம்
17. திருநெல்வேலி மாவட்டம்
18. திருப்பூர் மாவட்டம்
19. திருவண்ணாமலை மாவட்டம்
20. திருவள்ளூர் மாவட்டம்
21. திருவாரூர் மாவட்டம்
22. தூத்துக்குடி மாவட்டம்
23. தேனி மாவட்டம்
24. நாகப்பட்டினம் மாவட்டம்
25. நாமக்கல் மாவட்டம்
26. நீலகிரி மாவட்டம்
27. புதுக்கோட்டை மாவட்டம்
28. பெரம்பலூர் மாவட்டம்
29. மதுரை மாவட்டம்
30. விருதுநகர் மாவட்டம்
31. விழுப்புரம் மாவட்டம்
32. வேலூர் மாவட்டம்

வரலாறு

முற்காலச் சோழர் கிபி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்.

கி.பி நான்காம் நூற்றாண்டின் பிற்பாதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகின்றது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.இக்காலகட்ட பகுதியில் (கிபி 300 - கிபி 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. [2]

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராஜராஜ சோழன் மற்றும் அவனது மகனான இராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மத்திய இந்தியா, ஒரிஸ்ஸா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது.
இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, ஜாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.

14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்ஜி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இஸ்லாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் பலவீனப்படுத்தி இஸ்லாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இஸ்லாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விஜயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். ஹம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விஜய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விஜயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும் செழிப்புடனும் விளங்கியது.தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களை புதுப்பிக்கவும் செய்தனர்.இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.

1639 இல் ஆங்கிலேயர்கள் மதராஸில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு , அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர்.மாவீரன் அழகுமுத்துக்கோன், மருதநாயகம், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர், பூலித்தேவன்.வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, ஒண்டி வீரன், வெண்ணி காலடி தீரன் சின்னமலை, கட்டன கருப்பணன் போன்றோர் ஆட்சியாளர்களுக்கு வெள்ளையரை எதிர்த்து போரிட படைகளை தலைமையேற்று நடத்தினர்.

1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராஸ் மாகாணம் மதராஸ் மாநிலம் ஆனது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராஸ் மாநிலத்தின் கீழ் வந்தது. 1953இல் மதராஸ் மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராஸ் மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராஸ் மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்னாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. கேரள மாநிலத்தின் தென்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் வாழிடம் கன்னியாகுமரி மாவட்டமாக உருவாக்கப்பட்டு, தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. 1969இல், மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நன்றி .

No comments:

Post a Comment