Home

Saturday, October 30, 2010

தில்லி:

தில்லி (இந்தி: दिल्ली, பஞ்சாபி: ਦਿੱਲੀ, உருது: دلی) இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது நாட்டுத் தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புது தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது.

வட இந்தியாவில் உள்ள யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந் நகரம் நீண்ட காலம் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புப் பகுதியாக விளங்கி வருகின்றது. கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் இருந்தே இப் பகுதியில் மக்கள் வாழ்ந்து வருவதற்கான தொல்லியல் சான்றுகள் காணப்படுகின்றன. தில்லி சுல்தானகத்தின் எழுச்சிக்குப் பின்னர், வடமேற்கு இந்தியாவுக்கும், இந்து-கங்கைச் சமவெளிக்கும் இடையிலான வணிகப் பாதையில் அமைந்த முக்கியமான அரசியல், பண்பாட்டு வணிக நகரமாக இந் நகரம் உருவானது. இங்கே, பெருமளவிலான பழங்காலத்தைச் சேர்ந்தனவும், மத்திய காலத்தைச் சேர்ந்தனவுமான நினைவுச் சின்னங்களும், தொல்லியல் களங்களும் அமைந்துள்ளன. 1639 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் சாஜகான் மதிலால் சூழப்பட்ட நகரமொன்றை இங்கே அமைத்தார். இது 1649 தொடக்கம் 1857 ஆம் ஆண்டுவரை முகலாயப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது.

18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர், கல்கத்தாவே (இன்றைய கொல்கத்தா) அவர்களது தலைமையிடமாக இருந்தது. கம்பனியின் ஆட்சியிலும் பின்னர் சில காலம் பிரித்தானிய அரசின் கீழும் இந்நிலை நீடித்தது. 1911 ஆம் ஆண்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை தில்லிக்கே மாற்றும் அறிவிப்பை விடுத்தார். 1920களில், பழைய தில்லி நகருக்குத் தெற்கே புது தில்லி எனப் பெயர்பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது. 1947ல் இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இதுவே தலைநகராகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து மக்கள் குடிபெயர்ந்ததால் தில்லி ஒரு பல்லின மக்கள் வாழும் நகரமானது. இங்கு வாழ்வோரின் உயர்ந்த சராசரி வருமானமும், தில்லியின் விரைவான வளர்ச்சி, நகராக்கம் என்பனவும் நகரைப் பெருமளவு மாற்றியமைத்தன. இன்று இது இந்தியாவின் முக்கியமான பண்பாட்டு, அரசியல், வணிக மையமாக விளங்குகின்றது.

பெயர்
தில்லி என்னும் பெயர்த் தோற்றம் பற்றித் தெளிவு இல்லை. எனினும், இப்பெயர் ஏற்பட்டதற்கான பல காரணங்கள் கூறப்படுகின்றன. மௌரிய வம்சத்தைச் சேர்ந்த டில்லு அல்லது டிலு எனப் பெயர் கொண்ட மன்னனால் கி.மு. 50 ஆம் ஆண்டில் இப்பகுதியில் அமைக்கப்பட்ட நகருக்குத் அவனது பெயரைத் தழுவி இடப்பட்ட பெயர் தில்லி ஆனதாகப் பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். இங்கே அரசர் தாவா என்பவரால் நிறுவப்பட்ட இரும்புத் தூண் ஒன்றின் அத்திவாரம் உறுதியற்றதாக இருந்ததாகவும் இதனைக் குறித்து நகரம், இந்தி / பிராகிருத மொழிகளில் தளர்வு என்னும் பொருள்படும் டிலி என்று அழைக்கப்பட்டதாகவும் இதிலிருந்து தில்லி என்னும் பெயர் ஏற்பட்டது என்பதும் இன்னொரு சாரார் கருத்து. ராஜபுத்திர அரசர்கள் காலத்தில் இப்பகுதியில் புழங்கிய நாணயம் தெஹ்லிவால் எனப்பட்டது. சில ஆய்வாளர்கள் இப்பெயர் வாயிற்படி என்னும் பொருள் கொண்ட தெஹ்லீஸ் அல்லது தெஹாலி என்னும் சொற்களிலிருந்து பெறப்பட்டதாகக் கருதுகின்றனர். இந்து-கங்கைச் சமவெளிப் பகுதிக்கு ஒரு வாயிலாகத் தொழிற்பட்டதாலேயே இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். இந்நகரின் தொடக்ககாலப் பெயர் தில்லிக்கா என்பது வேறு சிலருடைய கருத்து.

வரலாறு

72.5 m (238 ft) உயரம் கொண்ட குதுப் மினார் - உலகின் மிக உயர்ந்த தனித்து நிற்கும் மினார்.
1560ல் கட்டப்பட்ட ஹுமாயூன் கல்லறையே முகலாயக் கல்லறைத் தொகுதிக்கான முதல் எடுத்துக்காட்டு.
1639ல் சாஜகானால் கட்டப்பட்ட செங்கோட்டை. இதிலிருந்தே இந்தியப் பிரதமர் விடுதலை நாள் உரை நிகழ்த்துகிறார்.இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகளின்படி தில்லியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் கி.மு. இரண்டாவது ஆயிரவாண்டுகளிலும் அதற்கு முன்னரும் குடியேற்றங்கள் இருந்ததாகத் தெரிகிறது. புகழ்பெற்ற இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களின் தலைநகரமான இந்திரப்பிரஸ்தம் இப் பகுதியிலேயே அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது. மௌரியப் பேரரசுக் காலத்தில் (கி.மு. 300) இக் குடியேற்றங்கள் வளர்ச்சியடைந்தன. ஏழு முக்கிய நகரங்களின் எச்சங்களை தில்லிப் பகுதியில் கண்டறிந்துள்ளனர். தொமாரா மரபினர் கி.பி 736ல் லால் காட் என்னும் நகரத்தை நிறுவினர். சௌகான் ராஜபுத்திரர் அல்லது ஆஜ்மெர் என அழைக்கப்படுவோர் 1180ல் லால் காட் நகரைக் கைப்பற்றி அதன் பெயரை கிலா ராய் பித்தோரா எனப் பெயர் மாற்றினர். சௌகான் அரசர் மூன்றாம் பிரிதிவிராஜை 1192 ஆம் ஆண்டில் ஆப்கானியரான முகம்மத் கோரி தோற்கடித்தார். 1206 ஆம் ஆண்டில் குலாம் மரபைத் தொடக்கி வைத்த குதுப் உத்தீன் அய்பாக் தில்லி சுல்தானகத்தை நிறுவினார். குதுப் உத்தீன், குதுப் மினாரையும், குவாத் அல் இஸ்லாம் எனப்படும் இந்தியாவின் மிகப் பழைய பள்ளிவாசலையும் கட்டுவித்தார். குலாம் மரபினர் ஆட்சி வீழ்ச்சியுற்ற பின்னர் கில்ஜி, துக்ளக், சய்யித், லோடி ஆகிய துருக்கியையும், நடு ஆசியாவையும் சேர்ந்த மரபினர் ஒருவர் பின் ஒருவராக ஆட்சி செய்தனர். இவர்கள் தில்லியில் உள்ள ஏழு நகரங்களுள் அடங்கும் பல கோட்டைகளையும், நகரப் பகுதிகளையும் அமைத்தனர். தில்லியின் முஸ்லிம் சுல்தான்கள் தமது இந்துக் குடிமக்களிடம் தாராளமாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டிக்கொண்டு திமூர் லெங்க் எனப்படுவோர் 1398ல் இந்தியாவுக்குள் நுழைந்தனர். தில்லிக்குள் புகுந்த அவர்கள் அதனை அழித்தனர். தில்லி சுல்தான்களின் காலத்தில் தில்லி, சூபியத்தின் முக்கிய மையமாக விளங்கியது. 1526 ஆம் ஆண்டில், சாகிருத்தீன் பாபர், முதலாம் பானிப்பட் போரில், லோடி மரபின் கடைசி சுல்தானை வென்று முகலாயப் பேரரசை நிறுவினார். தில்லி, ஆக்ரா, லாகூர் ஆகியவை இப் பேரரசின் தலைநகரங்களாக விளங்கின.

முகலாயப் பேரரசு, 16 ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் ஷேர் ஷா சூரி என்பவரின் ஐந்து ஆண்டு கால ஆட்சி நீங்கலாக, வட இந்தியாவில் மூன்று நூற்றாண்டுகள் நிலை பெற்றிருந்தது. பேரரசர் அக்பர் தலைநகரை ஆக்ராவில் இருந்து தில்லிக்கு மாற்றினார். இன்று, பழைய தில்லி என்று பொதுவாக அழைக்கப்படும் தில்லியின் ஏழாவது நகரை அமைத்தவர் பேரரசர் சாஜகான் ஆவார். அப்போது அந் நகருக்கு பேரரசரின் பெயரைத் தழுவி சாஜகானாபாத் எனப் பெயரிடப்பட்டது. 1638 ஆம் ஆண்டிலிருந்து பழைய தில்லி முகலாயப் பேரரசின் தலைநகராக இருந்தது. 1739 பெப்ரவரி மாதம், நாதர் ஷா, கர்னால் போரில் முகலாயப் படைகளை வென்று தில்லியைக் கைப்பற்றினார். இவர் தில்லியைக் கொள்ளையிட்டு மயிலணை உட்பட்ட பல விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றார். 1761ல் இடம் பெற்ற மூன்றாம் பானிப்பட் போருக்குப் பின், அகமத் ஷா அப்தாலி தில்லியைக் கைப்பற்றினார். 1803 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் நாள், தளபதி லேக் என்பாரின் தலைமையிலான பிரித்தானியப் படைகள் தில்லிப் போரில் மராட்டியரைத் தோற்கடித்து நகரைக் கைப்பற்றின.

1857 ஆம் ஆண்டின் இந்தியக் கலகத்துக்குப் பின், தில்லி பிரித்தானியரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதற்குச் சிறிது காலத்தின் பின், கல்கத்தா, பிரித்தானிய இந்தியாவின் தலைநகரானது. தில்லி, பஞ்சாப் மாகாணத்தின் ஒரு மாவட்டம் ஆனது. 1911 ஆம் ஆண்டில், தில்லி பிரித்தானிய இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசின் கட்டிடங்களை அமைப்பதற்காக, பிரித்தானியக் கட்டிடக்கலைஞரான எட்வின் லூட்யென் (Edwin Lutyens) என்பவரின் தலைமையிலான குழு, புதிய அரசியல், நிர்வாகத் தலைநகருக்கான வடிவமைப்பைத் தொடங்கியது. புது தில்லி எனப்பட்ட இப் புதிய நகரம் பிரித்தானிய இந்தியாவின் தலைநகர் ஆனது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் இதுவே தலைநகராகத் தொடர்ந்தது. இந்தியப் பிரிவினையின் போது ஏராளமான முஸ்லிம்கள் தில்லியிலிருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த அதே வேளை மேற்குப் பஞ்சாப், சிந்து ஆகிய மாகாணங்களில் இருந்து, பெருமளவு இந்துக்களும், சீக்கியரும் தில்லிக்குக் குடி பெயர்ந்தனர்.

இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), தில்லி தேசிய தலைநகரப் பகுதியாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சட்டசபை ஒன்றும் அமைக்கப்பட்டது.இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பகைமை உணர்வினாலும், காஷ்மீர் தொடர்பான பிணக்கினாலும், தில்லிக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. டிசம்பர் 2001ல், இந்திய நாடாளுமன்றக் கட்டிடம் காஷ்மீர் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. ஆறு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்ட இத் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு இருந்ததாக இந்தியா கருதியது. தொடர்ந்து அக்டோபர் 2005 ஆம் ஆண்டில், இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 62 குடிமக்களும், செப்டெம்பர் 2008 இல் நிகழ்ந்த இது போன்ற இன்னொரு தாக்குதலில் 30 குடிமக்களும் கொல்லப்பட்டனர்.

புவியியலும் தட்பவெப்பநிலையும்
தில்லி இந்தியா கேட் அருகில் மின்னல் தாக்குகிறது.தில்லி தேசிய தலைநகரப் பகுதி, 1,484 ச.கிமீ (573 ச.மைல்) பரப்பளவு கொண்டது. இதில் 783 ச.கிமீ (302 ச.மைல்) பரப்பளவு கொண்ட பகுதி நாட்டுப்புறப் பகுதியாகவும், 700 ச.கிமீ (270 ச.மைல்) பகுதி நகர்ப்புறப் பகுதியாகவும் உள்ளது. தில்லி தேசிய தலைநகரப் பகுதியின் மிகக் கூடிய நீளம் 51.9 கிமீ (32 மைல்), அகலம் 48.48 கிமீ (30 மைல்). இப் பகுதியில் மூன்று உள்ளாட்சி அமைப்புக்கள் உள்ளன. இவை தில்லி முனிசிப்பல் கார்ப்பரேசன் (1,397.3 ச.கிமீ அல்லது 540 ச.மை), புது தில்லி முனிசிப்பல் கமிட்டி (42.7 ச.கிமீ அல்லது 16 ச.மை), தில்லி கன்டோன்மென்ட் சபை (43 ச.கிமீ அல்லது 17 ச.மை) என்பனவாகும்.

தில்லி வட இந்தியாவில் 28°37′N 77°14′E / 28.61, 77.23 அமைவிடத்தில் உள்ளது. இது கிழக்கில் உத்தரப் பிரதேசத்தையும்; மேற்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் அரியானாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. தில்லி ஏறத்தாழ முழுமையாக கங்கைச் சமவெளியில் அமைந்துள்ளது. தில்லியின் முக்கியமான இரண்டு புவியியல் அம்சங்கள் யமுனை வெள்ளச் சமவெளியும், தில்லி முகடும் ஆகும். தாழ்நில யமுனை வெள்ளச் சமவெளி வேளாண்மைக்கு உகந்த வண்டல் மண்ணை வழங்குகிறது. எனினும் இச் சமவெளி தொடர்ச்சியான வெள்ளப் பெருக்குகளுக்கு உள்ளாகிறது. 318 மீட்டர் (1,043 அடி) வரையான உயரத்தை எட்டும் முகடு, இப் பகுதியின் மிக முக்கியமான அம்சமாக விளங்குகிறது. இது தெற்கே ஆரவல்லி மலைத்தொடரில் இருந்து தொடங்கி நகரின் மேற்கு, வடகிழக்கு, வடமேற்குப் பகுதிகளைச் சுற்றிச் செல்கிறது. இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படும் யமுனை ஆறு மட்டுமே தில்லி ஊடாகச் செல்லும் முக்கியமான ஒரே ஆறு ஆகும். புது தில்லி உட்பட்ட நகரின் பெரும்பாலான பகுதிகள் யமுனையின் மேற்குப் பகுதியிலேயே அமைந்துள்ளன. நகர்ப்புறப் பகுதியான சாஹ்தாரா ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தில்லி புவிநடுக்க வலயம்-4 இல் அமைந்துள்ளதால் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்காக வாய்ப்பு உண்டு.

தில்லி கண்டத் தட்பவெப்பநிலை கொண்டது. கோடை, மாரி காலங்களுக்கிடையே அதிக வெப்பநிலை வேறுபாடு காணப்படுகின்றது. ஏப்ரல் தொடக்கத்துக்கும், அக்டோபர் நடுப் பகுதிக்கும் இடையே நீண்ட கோடை காலமும்; இடையே பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலமும் நிலவுகின்றன. அக்டோபர் பின் பகுதியில் தொடங்கும் மாரிகாலம், ஜனவரியில் உயர் நிலை அடைகிறது. இக் காலத்தில் கடுமையான மூடுபனியும் காணப்படும். வெப்பநிலை −0.6 °ச (30.9 °ப) தொடக்கம் 47 °ச (117 °ப) வரை மாறுபடும். ஆண்டுக்கான சராசரி வெப்பநிலை 25 °ச (77 °ப) ஆக இருக்க, மாதத்துக்கான சராசரி வெப்பநிலை 13 °ச - 32 °ச (56 °ப - 90 °ப) இடையே மாறுபடுகின்றது. ஆண்டுக்கான சராசரி மழைவீழ்ச்சி 714 மிமீ (28.1 அங்குலம்). இதில் பெரும்பான்மையும் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காலத்தில் பெய்கிறது.

லட்சத்தீவுகள்

லட்சத்தீவுகள் இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 32 கிமீ² பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. கேரளக் கரைக்கு அப்பால் 200 தொடக்கம் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது.

முக்கிய தீவுகள் கவராட்டி, மினிக்கோய், அமினி என்பனவாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்தச் சனத்தொகை 51,000 ஆகும்.

புதுச்சேரி:

புதுச்சேரி (ஆங்கிலம்: Puducherry) எனவும் பாண்டிச்சேரி, புதுவை எனவும் அழைக்கப்படும் இந்நகரம், சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், வங்கக் கடலோரத்தில் அமைந்த நடுவண் அரசின் பிரதேசமாகும்.இது பிரெஞ்சு நாட்டின் பகுதியாக இருந்தது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் காக்கி நாடாவுக்கு அருகாமையிலுள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையிலுள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகிலுள்ள மாஹே நகரும் இந்த மாநிலத்தின் (ஆட்சிப் பகுதியின் பிராந்தியங்கள்) அங்கமாகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையாக இருக்கிறார்கள்.

நகரமைப்பு
கடற்கரையில் உள்ள காந்தி சிலைபுதுச்சேரி நகரத்தில் பிரெஞ்சுக்காரகளால் அமைக்கப்பட்ட சாலைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் அமைந்தவை என்பது புதுவையின் ஓர் சிறப்பு. அது குறித்தான ஒரு சொலவடை, ‘நீதி அழகு இல்லையென்றாலும் வீதி அழகு உண்டு’ என்பதாகும். புதுச்சேரியின் கிழக்குப் பகுதியில் அழகிய கடற்கரை உள்ளது.

கல்வி நடுவம்
ஏனம் கோதாவரியின் கழிமுகத்திலும் காரைக்கால் காவிரியின் கழிமுகத்திலும் அமைந்துள்ளன.சிறிய மாநிலமான புதுச்சேரியில் 7 மருத்துவ கல்லூரிகளும், 7 பொறியியல் கல்லூரிகளும், 10 கலை , அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளும் அமைந்துள்ளதால் இதனை கல்வி மையம் எனவும் வழங்கப்படுகிறது.

புதுச்சேரியில் இலக்கிய வளர்ச்சி
புதுச்சேரியில் இலக்கிய வளர்ச்சி என்பது மகாகவி பாரதி, புதுவைக்கு வருவதற்கு முன்பிருந்தே துவங்கிய ஒன்று. அந்த வழியில், மகாகவி பாரதியார், பெருஞ்சித்திரனார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர், முதலான அறிஞர் பெருமக்கள் இலக்கியத் தொண்டினை பின்பற்றி, புதுவையின் கவிஞர் பெருமக்கள், பண்ணார் தமிழன்னைக்கு முத்தாரம் சூட்டி, உலக அரங்கில் முன்னிறுத்த பெரும் பாடுபட்டனர் என்று சொன்னால் அது மிகையல்ல.புதுச்சேரியின் வரலாற்றில் ஒரு பெரும்பகுதி பிரெஞ்சு ஆட்சியின்கீழ் இருந்ததன் விளைவாக இங்கு பிரெஞ்சு மொழி இலக்கியமும் வளர்ச்சி பெற்றது. பல பிரெஞ்சு இலக்கியக் கழகங்கள் இன்றும் இங்கு இயங்கி வருகின்றன.

சமயவாரியாக மக்கள் தொகை
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 974,345 100%
இந்துகள் 845,449 86.77%
இசுலாமியர் 59,358 6.09%
கிறித்தவர் 67,688 6.95%
சீக்கியர் 108 0.01%
பௌத்தர் 73 0.01%
சமணர் 952 0.10%
ஏனைய 158 0.02%
குறிப்பிடாதோர் 559 0.06%

புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பூர்வீக‌ குடிமக்களில் பலரும் இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் நாட்டு குடிமை உரிமை பெற்று இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களாக உள்ளார்கள்.

தாத்ரா மற்றும் நகர் அவேலி:

தாத்ரா & நகர் அவேலி (Dadra and Nagar Haveli, குசராத்தி: દાદરા અને નગર હવેલી, மராத்தி: दादरा आणि नगर हवेली) , இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் சில்வாசா ஆகும்.

நில அமைப்பு
ஒன்றியப் பகுதியானது மேற்குத் தொடர்ச்சிமலையின் மேற்கு அடிவாரத்தில் அமைந்துள்ளது. நகர் அவேலி குசராத் மகாராஷ்டிரா எல்லையிலும் தாத்ரா நகர் குசராத்தின் எல்லைக்குள்ளும் அமைந்திள்ளன.ஒரே நதியான தமன் கங்கா செழிமைப்படுத்துப்படும் தாத்ரா & நகர் அவேலி நாற்பது விழுக்காடு காடு ஆகும்.

வரலாறு
ஆங்கிலேய ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும், முகலாயர்களின் எதிர்ப்பை நிலைநாட்டவும், மராத்தியர் போர்துகேயருடன் நட்பை வளர்க்க 1779-இல் ஒர் ஒப்பந்தம் செய்தனர். இதன் விளைவாக போர்துகேயரின் ஆட்சிக்குட்பட்ட பகுதியானது.

தாமன் தியு :

தமன் & தியு இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும்.

தமன் (மராத்தி: दमण, குஜராத்தி: દમણ) இந்தியாவின் தமன் தியூ ஒன்றியப் பகுதியின் தலைநகரம் ஆகும்.

கோவா இந்தியாவிலுள்ள ஒரு மாநிலமாகும். பரப்பளவில் இது இந்தியாவிலேயே மிகச்சிறிய மாநிலமாகும். பனாஜி இதன் தலைநகராகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தை எல்லை பகுதியாக கொண்டுள்ளது. கோவா மாநிலம் போர்ச்சுகீசியர்கள் காலனி பகுதியாக விளங்கியது. எனவே இதன் நகர்ப்புறம் போர்ச்சுகீசியர் கட்டிடக்கலையை கொண்டு அமைந்துள்ளது. இந்த நகரம், அதன் அழகிய தேவாலயங்கள், மற்றும் கடற்கரை பகுதிகளுக்காக சுற்றுலா பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. கோவாவில் பொதுவாக கொங்கணி மொழி பேசப்படுகிறது.

கோவா மாநிலம், வட கோவா, தென் கோவா ஆகிய இரண்டு மாவட்டங்களைக் கொண்டது. இம்மாவட்டங்கள் மேலும் 11 வட்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. இம்மாநிலம் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டது.


சமயவாரியாக மக்கள் தொகை
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 1,347,668 100%
இந்துக்கள் 886,551 65.78%
இசுலாமியர் 92,210 6.84%
கிறித்தவர் 359,568 26.68%
சீக்கியர் 970 0.07%
பௌத்தர் 649 0.05%
சமணர் 820 0.06%
மற்ற பிற 353 0.03%
குறிப்பிடாதோர் 6,547 0.49%

சண்டிகர்:

சண்டிகர் இந்தியாவில் உள்ள ஒரு நகராகும். இது பஞ்சாப், ஹரியானா ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களுக்க்கு தலைநகராக விளங்குகிறது. எனினும் இது எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இது ஒரு தனி யூனியன் பிரதேசமாகவே உள்ளது.

சமயவாரியாக மக்கள் தொகை
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 900,635 100%
இந்துகள் 707,978 78.61%
இசுலாமியர் 35,548 3.95%
கிறித்தவர் 7,627 0.85%
சீக்கியர் 145,175 16.12%
பௌத்தர் 1,332 0.15%
சமணர் 2,592 0.29%
ஏனைய 257 0.03%
குறிப்பிடாதோர் 126 0.01%

அந்தமான் நிக்கோபார் தீவுகள்:

அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளன. இது இரண்டு தீவுக் கூட்டங்களைக் கொண்டது. அவை அந்தமான் தீவுகள் மற்றும் நிகோபார் தீவுகள் ஆகும். இவை அந்தமான் கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கின்றன. இப்பிரதேசத்தின் தலைநகரம் போர்ட் பிளேர் என்னும் அந்தமானில் உள்ள நகரம் ஆகும்.


சமயவாரியாக மக்கள் தொகை
மொத்தம் 356,152 100%
இந்துகள் 246,589 69.24%
இசுலாமியர் 29,265 8.22%
கிறித்தவர் 77,178 21.67%
சீக்கியர் 1,587 0.45%
பௌத்தர் 421 0.12%
சமணர் 23 0.01%
ஏனைய 238 0.07%
குறிப்பிடாதோர் 851 0.24%